இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் -...

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் ...

புதுடெல்லி, 
ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 
பயங்கரவாத இயக்கங்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து வரும் உளவுத்துறையின் தகவல்கள், பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையினால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளன என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளதாக மெயில் டுடே செய்தி வெளியிட்டு உள்ளது. 
ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாகிதீன் மற்றும் அல்-கொய்தாவின் இந்திய துணைக்கண்ட பிரிவு உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பாக பெறப்பட்ட முக்கிய உள்ளீடுகள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என்பதை காட்டுகிறது என உளவுத்துறை உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கனரக வாகனம் ஏற்றப்பட்டது. இதுபோன்று இந்தியாவிலும் கனரக வாகனங்களை கொண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என்பதை ஒரு உள்ளீடு காட்டுகிறது. இத்தகவலானது பாதுகாப்பு முகமைகளுடன் பகிரப்பட்டு உள்ளது, கனரக வாகனங்களின் நகர்வை தீவிரமாக கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. குடியரசு தினவிழாவிற்கு முன்னதாக இரு நாட்கள் கனரக வாகனங்கள் நுழைவிற்கு தடை விதிக்கவும் பாதுகாப்பு முகமைகள் திட்டமிட்டு உள்ளன என தகவல்கள் தெரிவித்து உள்ளன. 
கேரளாவில் இதுபோன்ற தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதை தேசிய புலனாய்வு பிரிவு சமீபத்தில் முறியடித்தது. அப்போது பயங்கரவாத நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டவர்களும் வரிசையாக சிக்கினர். 
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து பயங்கரவாத நிதி மற்றும் ஹவாலா பண பரிமாற்றம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாத இயக்கங்கள் எளிதான முறையில் தாக்குதல் நடத்தி அதிகமான பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. பயங்கரவாத இயக்கங்களின் சிலிப்பர் செல் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பயங்கரவாதிகள் இப்போது 100 ரூபாய் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள், சிலிப்பர் செல்களுக்கும் இப்பணம் பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இவை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உத்திகளை கையாண்டு தாக்குதலை முன்னெடுக்கலாம் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

மூலக்கதை