பிறப்பால் தமிழச்சி.. பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிப்பவள் திரிஷா உருக்கம்

தினத்தந்தி  தினத்தந்தி
பிறப்பால் தமிழச்சி.. பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிப்பவள் திரிஷா உருக்கம்


ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது.

இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

இந்நிலையில் திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைதளத்தில் என்னுடைய டிவிட்டர் பக்கம் முலமாக தெரிவித்து இருக்கிறேன்.

நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள்.

நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள். என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை கருத்து கொண்டவள் அல்ல.

என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்படும் கண்டனங்கள், மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது.

இந்தக் கண்டனங்களை நான் எதிர்கொண்டு, என் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் அதேநேரத்தில், சில விஷமிகளால் என்னுடைய டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.

அந்த விஷமிகள் என் டுவிட்டர் பக்கத்தின் வழியாகவே, நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர்.

இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம். அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ்வோர்டையும் மாற்றிவிட்டு, அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை, தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன்.

நான் இந்த கடிதத்தை தயார் செய்யும் வேளையில்கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும்..? எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாரேதான் இருக்கிறேன்.

ஆயினும் இந்த சோதனையான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை