நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்குப்பக்கம் முடக்கம்:திரிஷா அதிர்ச்சி

தினத்தந்தி  தினத்தந்தி
நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்குப்பக்கம் முடக்கம்:திரிஷா அதிர்ச்சி

சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான 'பீட்டா'வில் நடிகை திரிஷா முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். 
சென்னையில் தெருவோரம் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வளர்த்து தத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். பிராணிகளுக்காக தனியாக பாதுகாப்பு இல்லம் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளார். பிராணிகள் மீது திரிஷா காட்டும் இந்த தீவிரத்தை பார்த்துத்தான் பீட்டா அமைப்பினர் அவரை அணுகி அதன் தூதுவராக ஆக்கி விலங்குகள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தினர்.
'பீட்டா'வில் சேர்ந்த பிறகு திரிஷா இன்னும் வேகமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா செயல்படுவது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பீட்டாவுக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் போராடுவதுடன் அந்த அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆனால் 'பீட்டா' அமைப்பில் இருக்கும் திரிஷா இந்த பிரச்சினையில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 'பீட்டா' அமைப்பில் இருந்து வெளியேறும்படி அவரை வற்புறுத்துவதற்கும் பதில் அளிக்க வில்லை.
இதனால் திரிஷா மீது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழ் அமைப்பினரும் ஆத்திரம் அடைந்து உள்ளனர். அவர்கள் திரிஷாவை கண்டித்து டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் படங்கள் மூலம் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். திரிஷாவுக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த சுவரொட்டியும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரித்து உள்ள நடிகை திரிஷா ஜல்லிக்கட்டை தொடர்ந்து எதிர்ப்பேன் என கூறி உள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். 
பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாச்சாரமா,தமிழ் கலச்சாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும்.
என்று கூறியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்,
”கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்” -என்று திரிஷா மீதான விமர்சனங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில்  நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்குப்பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனது பக்கத்தை முடக்கி அடையாளம் தெரியாதநபர் பதிவிட்டதாக திரிஷா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பீட்டாவுக்கு ஆதரவாக தான் கருத்து தெரிவித்ததாக பதிவிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் திரிஷாவுக்கு எதிர்,ஆதரவு கருத்து எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை