முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு

உடல்நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வகித்துவரும் இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சரவைக் கூட்டங்களை ஓ. பன்னீர்செல்வமே தலைமை தாங்கி நடத்துவார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்வார் என்றும், அவர் நலம் பெற்று பணிகளைக் கவனிக்க ஆரம்பிக்கும்வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்குமென்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

முதலமைச்சரான ஜெயலலிதா, உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளைத் தன்வசம் வைத்திருந்தார்.

தற்போதைய நிதியமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் இதற்கு முன்பாக இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை