ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.96,500 கோடி அபராதம்

தினமணி  தினமணி
ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.96,500 கோடி அபராதம்

செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனையாளரான உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் 1,300 கோடி யூரோ (சுமார் ரூ. 96,500 கோடி) அபராதம் விதித்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்று ஐரோப்பிய யூனியன் விளக்கமளித்துள்ளது.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச் சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.

அயர்லாந்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது. அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இது ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முந்தைய ஆண்டுகளுக்கான வரியாக 1,300 கோடி யூரோ (சுமார் ரூ. 96,500 கோடி) தொகையை வரி உள்ளிட்ட அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது.

இதனை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதக் கூடாது. அயர்லாந்தின் தவறான தொழிலக கொள்கையால் ஐரோப்பிய யூனியனுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்யவுள்ளோம். இந்த நடவடிக்கையால் அமெரிக்க நிறுவனங்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நிறுவனங்கள்தான். வரிச் சலுகை, வரி விலக்கு என்ற பெயரில் உலகின் ஒரு பகுதியில் வேலைவாய்ப்புகள், வருவாய் குவிவது யாருக்குமே நல்லதல்ல என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் கூறினார்.

அயர்லாந்துக்கு ஆப்பிள் நிறுவனம் 0.005 சதவீதத்துக்கும் குறைவான விகிதத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தி வருகிறது. இது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்தது.

மூலக்கதை