பஞ்சாப்: குண்டு வெடிப்பில் 2 பேர் பலி; 4 பேர் காயம்
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தேவையற்றவை என்று சாலையோரங்களில் தூக்கி எறியப்படும் பொருள்களை சேகரித்து விற்கும் தொழிலில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 2 பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இருவரும் சாஸ்திரி நகரில் வழக்கம்போல், தேவையற்ற பொருள்களை சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பொருளில் ஒட்டியிருந்த செம்பு உலோகத்தைப் பிரித்தெடுக்க அவர்கள் இருவரும் முயன்றபோது, அது வெடித்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.