ஆஸ்திரேலிய குடியேறிகள் மையத்தில் தவறாக நடத்தப்படும் குழந்தைகள்; விசாரணைக்கு உத்தரவு
தொலைதூர பசிபிக் தீவான நவ்ருவில், ஆஸ்திரேலியாவால் நடத்தப்படும் குடியேறிகளின் மையத்தில் குழந்தைகள் தவறாக நடத்தப்படுவதாக பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலியாவின் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளம் வயதினர், பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல் மற்றும் மன அழுத்தத்தால் சுயமாக தீங்கை தேடிக் கொள்ளுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்படுவதாக தெரியப்படுத்தும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை தான் கண்டதாக பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
மூத்த அரசு அமைச்சர் ஒருவர் அந்த ஆவணங்களில் புகார்கள் மட்டுமே இருப்பதாகவும் அதில் தவறுகள் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவை, ஆஸ்திரேலியாவின் தஞ்சம் கோருவோருக்கான கரைக்கு அப்பால் தடுப்புக் காவல் என்ற கொள்கையை நிறுத்துமாறும் குடியேறிகளை நிரந்தரமாக குடியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.