9/11 தாக்குதல்கள்: அமெரிக்காவுக்கு சவுதி கடும் எச்சரிக்கை

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
9/11 தாக்குதல்கள்: அமெரிக்காவுக்கு சவுதி கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டால் கடும் பெருளாதார விளைவுகள் ஏற்படும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

அந்தத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டும் வகையிலான மசோதாவொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதா நிறைவேறி சட்டமானால், 9/11 தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவுக்கு எதோவொரு வகையில் பங்கு இருந்தது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வழி ஏற்படும்.

அப்படியான சட்டம் நிறைவேறினால் பல நூறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்கச் சொத்துக்களை விற்றுவிட நேரிடும் என சவுதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த சவுதி வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜூபைர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது.

இந்த மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு ஆகிய இரு நிலைப்பாடுகளும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ளன.

எனினும் அந்த மசோதா சட்டமானால், அது மிகக்கடுமையான இராஜதந்திர மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என ஒபாமாவின் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நான்கு இடங்களில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்தாக்குதல்களில் தனக்கு எவ்விதத் தொடர்புகளும் இல்லை என சவுதி அரேபியா எப்போதுமே கூறிவந்துள்ளது.

ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் சவுதி பிரஜைகள்.

மூலக்கதை