வட மாகாணசபையின் முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: உலமா கட்சி

தமிழ்வின்  தமிழ்வின்
வட மாகாணசபையின் முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: உலமா கட்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாணசபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி பிராந்திய சபை வழங்கப்பட வேண்டும் என வட மாகாணசபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது கொடிய விஷத்துடன் சீனி மிட்டாய் கலக்கப்பட்டது போன்ற வக்கிரத்தனமான செயலாகும் என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராக இருந்தாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் அல்ல. மாறாக ஆதி காலம் முதல் இலங்கையில் அரபு மொழியில் பேசி வந்த அவர்கள் தமது தமிழ் சூழல் காரணமாக தமிழ் பேசுகிறார்கள். இன்றும் கூட அவர்களின் பேச்சு வழக்கில் 20 வீதத்துக்கும் அதிகமான அரபுச்சொற்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முஸ்லிம்கள் தம்மை தனி இனமாகவே நோக்குகின்றனர் என்பதுடன் இது வரை காலமும் தமிழ் மக்களும் முஸ்லிம்களை தனி இனமாகவே பார்த்து வந்துள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக வட மாகாண முஸ்லிம்கள் வேறுபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதேபோல் 34 வீதமாக வாழும் மட்டக்களப்பு முஸ்லிம்கள் 4 வீத காணிகளுக்குள் முடக்கப்பட்டு தமிழ் பகுதிகளில் அவர்கள் சுதந்திரமாக காணிகளில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டமை முஸ்லிம்கள் தனி இனமாக பார்க்கப்பட்டதனால் தான் என்பதை மறுக்க முடியாது எனவும் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அது போன்று அவர்களை தமிழ் அதிகாரிகள் கூட தமிழர்களாக பார்க்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், முஸ்லிம்களுடன் வாழ முடியாது என தெரிவித்தே கல்முனை தமிழர்கள் தமக்கென தனியான பிரதேச செயலகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தமக்கு தேவை ஏற்படும் போது மட்டும் முஸ்லிம்களை தமிழர்கள் என கூற முற்படுவது தமிழ் அரசியல்வாதிகளின் தொடரான நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வட மாகாணசபையின் இந்த பரிந்துரையை உலமா கட்சி முற்றாக நிராகரிப்பதுடன், கிழக்கு மாகாணம் தனியாக இருப்பதுடன் கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைத்துக் கொள்ளலாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாணசபை சிங்கள மக்களையும் கொண்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமாக இருக்கும் என  உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை