இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை?

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் ரகசிய பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னை வந்திருந்தார்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கிண்டியில் உள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கியுள்ளார்.

அவரை தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, சண்முகசுந்தரம் ஆகியோரும், அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், நவநீதகிருஷ்ணன், இன்பதுரை உள்ளிட்டோரும் சந்தித்துள்ளனர்.

தி.மு.கவினர், தேர்தலில், அ.தி.மு.கவுக்காக தேர்தல் வேலை பார்க்கும் அதிகாரிகளை நீக்க வேண்டும். பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றிய விவரம் வெளியகவில்லை.

இந்நிலையில் அதிமுக வட்டாரத்தில் இது தொடர்பாக கூறுகையில், நேற்று இரவு 7.30 மணியளவில் நஜீம் ஜைதியை சந்திக்க, எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

ஏழு நிமிடங்கள்தான் எங்களிடம் பேசினார். எழுத்துபூர்வமான குற்றச்சாட்டாக எதையும் நாங்கள் கொடுக்கவில்லை.

தம்பிதுரை அவரிடம் ஜெயலலிதா கூறிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

முதல் கோரிக்கையாக, கட்சித் தலைவர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களை நடத்தும்போது, அந்தக் கூட்டத்தின் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதனால் செலவுக் கணக்கு அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விடுகிறது. இந்தமுறையை நீக்க வேண்டும்.

அடுத்து, சுவர் விளம்பரங்களை எழுதுவதற்கு ஆர்.டி.ஓ வரைக்கும் அலைந்து சென்று அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்றாக, எளிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டான பணம் கண்டெய்னரில் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியானது.

இதைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான இமேஜை உருவாக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் செயல்படுகின்றன.

எனவே சிறுதாவூர் பங்களா கண்டெய்னர் பற்றி யாரும் பேசக் கூடாது. அதைப் பற்றி அவதூறான செய்திகளும் வெளியாகக் கூடாது என்பதை முக்கியமான கோரிக்கையாக முன்வைத்தோம்.

மேலும், நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ் ஆகியோரிடம் இருந்து பல்லாயிரம் கோடிகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இதைப் பற்றி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் இதைப் பற்றிப் பேசுவதை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்பதை தெரிவித்தோம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை