”யாருக்கும் ஓட்டு கிடையாது”: வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தும் கிராமத்தினர்
திருநின்றவூர் அடுத்த பாக்கம் இருளை கிராமத்தினர், தங்களின் தேவைகளை தீர்க்கவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருநின்றவூரை அடுத்த பாக்கம் இருளர் காலனியில் இருளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 20 குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
வீடுகள் இன்றி பல இடங்களில் வசித்து வந்த அவர்களுக்கு அரசு சார்பில் களத்து மேடு புறம்போக்கு இடத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 1½ சென்ட் இடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் 2 ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை.
இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந் தேதி அவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அந்த பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் நேற்று மாலை திடீரென தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.