விஜயகாந்தின் முதல்–அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது: விந்தியா

மாலை மலர்  மாலை மலர்
விஜயகாந்தின் முதல்–அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது: விந்தியா

மதுரை, மார்ச். 31–

விஜயகாந்தின் முதல் – அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என்று நடிகை விந்தியா பேசினார்.

மதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் சாலைமுத்து வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நடிகை விந்தியா பேசியதாவது:–

கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் முதல் – அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு செய்யாத திட்டங்களே இல்லை. ஆனால் எப்படியாவது முதல்–அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன.

மக்களுக்காக நான், மக்களால் நான் என்று பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா.

மக்களோடு இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கிறது. ஆனால் பதவி வெறி பிடித்த எதிர்கட்சிகள் கொள்கையற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொன்ன கருணாநிதி இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தலைமை தாங்கி நடத்திய தமிழக காங்கிரஸ் என்று குஷ்புவையும், நக்மாவையும் நம்பி இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இரண்டு பேரையும் புகழ்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக காங்கிரஸ் குஷ்புவையும், நக்மாவையும் சுற்றியே செயல்படுவதால் ‘குங்மா’ ஆகிவிட்டது.

பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மக்கள் நலக்கூட்டணி என்று ஒரு அணி. அதை பஞ்சபாண்டவர் அணி என்கிறார்கள். விஜயகாந்தை முதல்–அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை. முதல்–அமைச்சராக துடிக்கும் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரிவதில்லை. பாகுபலி படத்தில் கருப்பின கூட்டம் வரும். அந்த கூட்டத்தினர் ஏதோ ஒரு பாசையை பேசி ரசிகர்களை குழப்புவார்கள். அதுபோல விஜயகாந்த் தமிழக மக்களை மைக்கில் பேசி குழப்பி வருகிறார்.

விஜயகாந்தின் செய்கைகளை தமிழக மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். அவரை தலைவராக மக்கள் ஏற்கவில்லை. ஆனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் அடுத்த முதல்வர் என்கிறார்கள். இது ஒருபோதும் பலிக்காது. அதுபகல் கனவாகவே இருக்கும்.

முதல்–அமைச்சர் பதவி என்பது மக்களுக்காக சேவை செய்யும் பதவி, குடும்பத்தை வளப்படுத்தும் பதவி அல்ல. ஆனால் 5 முறை குடும்பத்தை வளப்படுத்தி கொண்ட சிலர் மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்கிறார்கள். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வைத்து உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் 6–வது முறையாக மட்டுமல்ல, தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருப்பார்.

இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.

மூலக்கதை