எல்லா பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டும்: சாஸ்திரி

மாலை மலர்  மாலை மலர்
எல்லா பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டும்: சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த உலக கோப்பையில் எங்களது திறமை 70 சதவீதம் அளவுக்கே வெளிப்பட்டு இருப்பதாக நம்புகிறேன். இன்னும் சில பகுதியில் முன்னேற்றம் காண வேண்டி இருக்கிறது. அரைஇறுதி என்றால் மிக உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒன்று, அல்லது இரண்டு வீரர்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. 6-7 வீரர்களும் பொறுப்புடன் விளையாட வேண்டியது அணிக்கு தேவையாகும். அவ்வாறு இதுவரை நடக்கவில்லை. நாளைய ஆட்டத்தில் (இன்று) அப்படி நடக்கும் என்று நம்பலாம். 20 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான அணிகளில் வெஸ்ட் இண்டீசும் ஒன்று. அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

யுவராஜ்சிங் இல்லாதது எங்களுக்கு பாதிப்பு தான். கடைசி லீக்கில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற நிலையில், அவர் 3 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி, ஆட்டத்தை நம் பக்கம் திருப்புவதில் பக்கபலமாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த ஆட்டத்தில் காயமடைந்து விட்டார்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

மூலக்கதை