சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவோரை பாதுகாக்க மத்திய அரசு வகுத்த வழிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

மாலை மலர்  மாலை மலர்
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவோரை பாதுகாக்க மத்திய அரசு வகுத்த வழிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

புதுடெல்லி, மார்ச்.31-

சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றப்போய் பலரும் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியது வருகிறது. கோர்ட்டு, போலீஸ் என பல நடவடிக்கைகளையும், தொல்லைகளையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனால் சிலர் சாலை விபத்துகள் நடக்கிறபோது, கண்டு கொள்ளாமல் போய் விடுவதும் உண்டு. அப்போது உயிரிழப்புகள் நேருவதையும் காண முடியும்.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து வழிமுறைகளை வகுத்து தருவதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரைகளை அளித்தது.

அவற்றில், சாலை விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுகிறவர்கள் எந்த அல்லலிலும், தொல்லையிலும் அகப்படாமல் தங்களை காத்துக் கொள்வதற்கு ஏற்ற வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

மதுபானம் அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டி, சாலை விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு எதிராக சட்டத்தின் பிடி இறுகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்கள் நிறுவவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வழிமுறைகள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஷ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று பரிசீலித்து ஒப்புதல் அளித்தது.

இந்த வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும், சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றும் வகையில் விரிவான விளம்பரம் தருமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே இனி சாலை விபத்துகளில் சிக்குவோரை தயக்கமின்றி பொதுமக்கள் காப்பாற்றுவதற்கு வழி பிறக்கும்.

மூலக்கதை