சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு: ஜெயலலிதா தரப்பு வக்கீல் இன்று வாதத்தை தொடங்குகிறார்

மாலை மலர்  மாலை மலர்
சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு: ஜெயலலிதா தரப்பு வக்கீல் இன்று வாதத்தை தொடங்குகிறார்

புதுடெல்லி, மார்ச்.31-

சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

9-வது நாளான நேற்றைய விசாரணையில் ஏற்கனவே நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க கட்டிடங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகள் பதிவாளரின் ஒத்துழைப்புடன் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்ட விதம் பற்றியும் அது தொடர்பான விவரங்களையும் விரிவாக முன்வைத்தார்.

நீதிபதிகள் குறுக்கிட்டு, ஆவணங்களின் அடிப்படையில் விஷயங்களை முன்வைத்தால் சரியாக இருக்கும் என்று கூறினார்கள்.

இதற்கு ஆச்சார்யா தான் ஆவணங்களின் அடிப்படையில்தான் அனைத்து விஷயங்களையும் முன்வைப்பதாகவும், சொத்துகள் தொடர்பான தொகை மற்றும் எண்ணிக்கையை உள்ளது உள்ளபடியே எடுத்து வைப்பதாகவும், அப்படி செய்வதால் குற்றங்களின் பின்னணியை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து லெக்ஸ் பிராபர்ட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாகவும் வாதங்களையும் அவை தொடர்பான கணக்கு வழக்குகளையும் முன்வைத்தார்.

இறுதியாக அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-

சொத்துக்குவிப்பு என்ற குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அணுக முடியாது. ஐகோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டது போல, அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை காரணம் காட்டி சொத்துகளை கணக்கிட முடியாது. ஐகோர்ட்டின் தீர்ப்பில் பல குறைபாடுகள் உள்ளன. ஒருவேளை ஐகோர்ட்டின் தீர்ப்பு சரி என்று கருத்தில் எடுத்து கொண்டாலும் அத்தீர்ப்பில் உள்ள கணக்குப் பிழைகளை திருத்தினால் வருவாய்க்கு அதிகமாக 35 கோடி ரூபாய் கணக்கில் வருகிறது.

எனவே, பெங்களூரு ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து தனிக்கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு பி.வி.ஆச்சார்யா தன்னுடைய வாதங்களை நிறைவு செய்தார்.

அவரை அடுத்து மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தனது சுருக்கமான வாதத்தில் ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட சில தீர்ப்புகளில் உள்ள முக்கியமான பகுதிகளை படித்துக் காட்டினார். அவர் கூறியதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பிறகே அவை தாக்கல் செய்யப்பட்டன.

கர்நாடகா ஐகோர்ட்டு, அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யாவை வாதாட அனுமதி அளிக்க வில்லை. அவருக்கு அளிக்கப்பட்டது ஒரு நாள் மட்டுமே. அவர் 1,000 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தார். இப்படி அவசரப்படுத்தியதால் கணக்குகளில் பல பிழைகள் ஏற்பட்டன.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முதல்வர் பதவியில் உள்ள ஒருவர் மேல்முறையீடு செய்கிறார். அவரிடமே உள்துறை இலாகாவும் உள்ளது. அந்த மாநிலத்தின் போலீஸ் அரசுத்தரப்பாக ஆஜரானது. இது நீதியை பிறழச் செய்யும் செயலாகும்.

ஐகோர்ட்டு தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள் பற்றி பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதங்களில் உள்ள கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

ஏற்கனவே இந்த வழக்கில் எனது வாதங்களில் உள்ள முக்கியமான அம்சங்களை தனியாக எழுத்து வடிவில் கோர்ட்டுக்கு தாக்கல் செய்திருக்கிறேன். அனைத்தையும் பரிசீலனை செய்து ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வகைசெய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடக்கிறது. ஜெயலலிதா தரப்பு வக்கீல் எல்.நாகேஸ்வரராவ், தனது வாதங்களை தொடங்குவார் என்று தெரிகிறது.

மூலக்கதை