ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை

மாலை மலர்  மாலை மலர்
ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை

வேலூர், மார்ச்.30–

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலப்பாடியை சேர்ந்தவர் முருகன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி ஜெயமதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயமதிக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு யுவனேஸ்குமார் என்று பெயரிட்டனர். கடந்த சில நாட்களாக குழந்தை யுவனேஸ்குமாருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் குழந்தையின் வயிறு வீக்கம் அடைந்தது. தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர் கடந்த வாரம் குழந்தையை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் குழந்தையின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் ஒரு சிறுநீரகம் செயல் இழந்தது.

மற்றொரு சிறுநீரகத்தில் இருந்து செல்லும் குழாயில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சிறுநீரக குழாயில் அடைப்பு ஏற்பட்டு குழந்தை சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்குள்ளானது தெரிய வந்தது.

ஒன்றரை மாத குழந்தை என்பதால் செயல் இழந்த சிறு நீரகத்தை மாற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதனால் அந்த சிறுநீரகத்தை மாற்றாமல், இன்னொரு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட அடைப்பு கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அரசு ஆஸ்பத்திரி டீன் உஷா சதாசிவம் உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் சவுந்தர பாண்டியன் மேற்பார்வையில் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிநாத், பொதுஅறுவை சிகிச்சை நிபுணர் ராஜவேலு, மயக்கவியல் நிபுணர் தீபா டாக்டர்கள் நமச்சிவாயம், பாலபாஸ்கர், ரேவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

சுமார் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டியை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உடல் நலம் தேறிவருகிறது.

மூலக்கதை