டி-20 கிரிக்கெட்: சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
புனே, பிப்.10-
இந்தியாவுக்கு எதிரான தனது முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அனுபவம் இல்லாத இளம் இலங்கை அணி அபார வெற்றிபெற்றது. 5 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த மண்ணிலேயே இந்தியாவை இலங்கை வீழ்த்தியது.
டாஸ் வென்ற இலங்கை, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இந்தியாவின் முதல்நிலை பேட் ஸ்மென்களான ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்த வேளையில், அடுத்து தவான் 9 ரன்களில் வெளியேறினார்.
இதனால் தொடக்கத்திலேயே அதிர்ச்சிக்கு உள்ளான இந்தியா, அதிலிருந்து மீளக் கடுமையாகப் போராட முயன்றது. எனினும், ஏமாற்றம் தொடர்ந்தது. சரசரவென இந்திய வீரர்கள் அனைவரும் சரிந்தனர்.
இவர்களில் அஸ்வின் (31 ரன்), ரெய்னா (20 ரன்) மற்றும் யுவராஜ் சிங் (10 ரன்) ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 101 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி சுருண்டது.
இலகுவான இலக்கை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை, சிரமமின்றி வெற்றி இலக்கைக் கடந்தது. 18ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
20 ஓவர் போட்டியில் 3 ஆட்டங்களில் இரு குழுக்களும் மோதும் நிலையில், முதல் ஆட்டத்தில் வென்று இலங்கை 1-0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலைக்கு வந்துள்ளது.