U-19 உலகக் கோப்பை: முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 268 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் கான் 74 ரன்களும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 189 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ஸர்ஃப்ராஸ் கானுக்கு வழங்கப்பட்டது. இதே போல் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.