37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (19:6 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (19:6 IST)

 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.  இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச், இந்தியாவை பேட் செய்யுமாறு பணித்தார். 

இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, விராட் கோலி அதிரடி ஆட்டம் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி மிரட்டியது.

தொடக்க வீரர் பிஞ்சு மற்றும் வார்னர் அதிரடி துவக்கத்தை அந்த அணிக்கு கொடுத்தனர். இருப்பினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5.1 ஓவரில் வார்னர் 17 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் பிஞ்சு-ஸ்மித் ஜோடி சிறிது அதிரடி காட்டினாலும், அஷ்வின்  பிஞ்சு (44 ரன்கள்)ஐ வெளியேற்றினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் ரன்வேகத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், நெருக்கடி ஏற்பட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரன் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர்.  ஸ்மித்(21) ஹெட் (2), லின் (17), வாட்சன் (12) வேட் (5) என முண்ணனி வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். 

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. அதேவேளையில் ஒருவிக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டம் முழுவதுமாக இந்தியா பக்கம் திரும்பியது.  இறுதியில் 19.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம்  இந்திய அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக  பும்ரா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஜடேஜா, பாண்டயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள்கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை( ஜனவரி 29) மெல்போர்னில் நடைபெறுகிறது.

மூலக்கதை