இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது?; அரசு பதிலளிக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது?; அரசு பதிலளிக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Sunday, 24 January 2016 09:39

2009ஆம் ஆண்டு இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது என்பதை நீதியான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்ட காலம் முதல் வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது 14,000 அதிகமானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என ஒரு தொகுதியினர் காணமற்போயுள்ளனர்.

மறுபக்கத்தில் இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் பொதுமக்கள் பிரவேசித்தபோது முட்கம்பி வேலிகளுக்குள் நீண்டவரிசையில் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒரு மணிநேரம் கூட புலிகளின் அமைப்பில் இருந்தால் எம்மிடம் சரணடையுங்கள். உங்களை விசாரணையின் பின்னர் மூன்று மாதங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று இராணுவத்தினர் பகிரங்கமாக அறிவித்தனர்.

இதனையடுத்து, அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் சரணடைந்தனர். அதுமட்டுமன்றி உறவுகளால் நேரடியாகவே இராணுவத்தினரிடம் பலர் கையளிக்கப்பட்டனர். இதனை விட இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை விசாரணை செய்யவேண்டுமெனக் கூறியும் அழைத்துச் சென்றிருந்தனர்.

ஓமந்தை காவல் நிலையத்தில் வைத்து இளைஞர்கள் வகைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வுனியாவில் அமைக்கப்பட்டிந்த தற்காலிக முகாம்களில் இருந்தவர்களில் பலரும் விசாரணையின் பேரால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ளன.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பது இன்றுவரையில் தெரியாதுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டவர்களாக இருந்தாலும் போரியல் சட்டங்களுக்கு அமைவாக சரணடைந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் குற்றவாளிகளாகக் காணப்படுவார்களாயின் உள்நாட்டு அல்லது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்விதமான செயற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்களாக இருந்தா லும் கூட சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்படுவதென்பது போரியல் தர்மத்தை மீறும் செயற்பாடாகும்.

இதேவேளை கடந்த காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை சமாளித்துக்கொள்வதற்காக கடந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு விடயத்தில் இதுவரையில் 23,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

5,000 முறைப்பாடுகள் இராணுவத்தினரது குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதும் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு முறைப்பாடு செய்தவர்கள் சாட்சியமளிக்கையில் தமது உறவுகளை யாரிடம் ஒப்படைத்தோம், எவ்வாறான நிலைமையில் காணமல்போனார்கள், தமது உறவுகள் காணமல்போனமை தொடர்பான சம்பவத்துடன் யார் யார் தொடர்புபட்டுள்ளனர் போன்ற தகவல்களை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவ்வாறான எந்த நபர்கள் மீதும் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்படுகின்றன என்பது எமது கட்சியின் (ஈபிஆர்எல்எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் முதற்தடவையாக பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதாயின் மற்றும் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அவற்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

அதன்பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. குழுவினர் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருந்மையை உறுதிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று இரகசிய முகாம்களிலிருந்து வெளியேறிவந்தவர்கள் சிலரும் காணப்படுகின்றனர்.

எனினும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவர்கள் இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், இரகசிய முகாம்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை செய்யவேண்டிய அரசாங்கம் அது தொடர்பிலான எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.
மேலும், வெள்ளைவான் சம்பவங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கத்துடன் இணைந்து அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மற்றும் அத்தகைய சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களின் விபரங்களையும் பொதுமக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மேலும் பல சான்றுகள் அவர்களிடத்தில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கின்ற நிலையிலேயே ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நல்லாட்சியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கும் புதிய அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென அறிவித்திருக்கின்றது.

இந்த அறிப்பானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. விசேடமாக தமது உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்துமளவிற்கு உறவினர்களிடம் ஆதரங்களும், சாட்சியங்களும் காணப்படும் நிலையில் அவர்கள் உயிருடன் இல்லையென கூறுவது எந்தவகையில் நியாயமாகும்?

அவ்வாறு அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது, அதற்கு யார் காரணம் என்பதை அறிவிக்க வேண்டும். உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும். சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். அதனைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே உயிருடன் இல்லையென அறிவிப்பதானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முழுமையாக பாதிப்பதுடன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே வலுப்படுத்துவதாக அமையும். ஆகவே இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடனான பகிரங்க விசாரணை அவசியம்.

அதேநேரம் தற்போது காணமல்போனோரில் பெருமளவானோர் உயிருடனில்லையென்ற அறிவிப்பின் பிரகாரம் ஒரு தொகையினர் உயிருடன் இருக்கின்றனரா என்ற கேள்வியொன்று காணப்படுகின்றது. ஆகவே உயிருடன் இருப்பவர்கள் யார் அவர்கள் எங்குள்ளனர். உயிரழந்தவர்கள் யார் போன்ற விபரங்களை உடனடியாக பகிரங்கப்படுத்தபடவேண்டும்.” என்றுள்ளார்.

மூலக்கதை