கை செலவிற்கு பணம் கொடுக்காத மகன்கள் மீது வழக்கு தொடர்ந்த தந்தை: இத்தாலியில் வினோத சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
கை செலவிற்கு பணம் கொடுக்காத மகன்கள் மீது வழக்கு தொடர்ந்த தந்தை: இத்தாலியில் வினோத சம்பவம்

வடக்கு இத்தாலியில் உள்ள Treviso என்ற நகரில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஓய்வூதியமாக மாதம் சுமார் 600 யூரோக்கள் வருகிறது. இதில், 300 யூரோக்களை வீட்டிற்கு வாடகையாக செலுத்தி விடுவதால், எஞ்சிய 300 யூரோக்களை வைத்துக்கொண்டு மாதம் முழுவதும் அவரது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், தனது இரண்டு மகன்களிடம் நபர் ஒருவருக்கு சுமார் 80 யூரோக்களை கொடுத்து உதவ வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் 160 யூரோக்கள் மற்றும் எஞ்சிய ஓய்வூதிய தொகையான 300 யூரோக்களை சேர்த்து, 460 யூரோக்களை கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொள்வேன் என கேட்டுள்ளார்.

தந்தையின் கோரிக்கையை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் இருவரும், அவர் கேட்ட பணத்தை தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, தனக்கு தேவையான பணத்தை பெற்று தர வேண்டும் என தனது மகன்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதியவரின் வழக்கறிஞரான Fabio Capraro என்பவர் கூறுகையில், முதியவர் தனது உரிமைகளுக்கு உட்பட்டு தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும், குடும்பப் பொறுப்புகளை மதிக்காமல் செயல்படும் மகன்கள் அவர்களது தந்தைக்கு தேவையான பணத்தை அளிப்பது சரியானது தான் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்திற்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை