மெரினா நீச்சல் குளத்தில் கூட்ட நெரிசலின் போது: நுழைவுச்சீட்டு வழங்காமல் கூடுதல் ...
சென்னை,
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் மெரினாவில் நீச்சல் குளம் உள்ளது. இதில் ஒரு மணி நேரம் குளிப்பதற்கு ரூ.15 கட்டணமாக (12 வயதுக்கு மேல்) வசூலிக்கப்பட்டு வருகிறது.
கோடைகால வெப்ப சூட்டை தணிப்பதற்காகவும், நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலும் தினமும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மெரினா நீச்சல் குளத்துக்கு குளிக்க வருபவர்களிடம் கூட்ட நெரிசலின்போது ஊழியர்கள் நுழைவுச்சீட்டு வழங்காமல் கூடுதலாக ரூ.5 கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, மெரினா நீச்சல் குளத்தில் கூட்டம் அலைமோதி உள்ளது. அப்போது ஊழியர்கள் நுழைவுச்சீட்டு வழங்காமல் ரூ.20 கட்டணத்தை வாங்கிக்கொண்டு நீச்சல் குளத்துக்கு உள்ளே அனுமதித்துள்ளனர்.
கூட்டம் அதிகம் இருந்ததால் குளிப்பவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது நுழைவுச்சீட்டு வழங்காத ஊழியர்களை விசாரிக்காமல், குளித்தவர்களை மட்டும் எச்சரித்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.