நம் அதிகாரியை வெளியேற உத்தரவிட்ட கனடா அரசுக்கு மத்திய அரசு பதிலடி

தினமலர்  தினமலர்
நம் அதிகாரியை வெளியேற உத்தரவிட்ட கனடா அரசுக்கு மத்திய அரசு பதிலடி

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில், இந்திய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறிய குற்றச்சாட்டை மத்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது. அங்குள்ள இந்திய துாதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடா அதிகாரியை, ஐந்து நாளில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.





புதுடில்லி, : நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக்கும் முயற்சியில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கனடாவில், 7.70 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் தொகையில் இது, 2 சதவீதம்.

காலிஸ்தான் ஆதரவு சீக்கிய பயங்கரவாத அமைப்புகள், கனடாவில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியா கவலை



ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். காலிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பேரணியும் நடத்தினர்.

மேலும், கனடாவில் உள்ள இந்திய துாதரகம் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்திய துாதரக அதிகாரிகளுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, இந்தியா, கனடா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், புதுடில்லியில் கடந்த, 9 - 10ம் தேதிகளில் நடந்த 'ஜி - 20' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வந்திருந்தார்.

கடந்த, 10ம் தேதி அவரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, காலிஸ்தான் பயங்கரவாத பிரச்னை தொடர்பாக இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார்.

அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கடுமையுடன் குறிப்பிட்டார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டது.

நீண்டகாலமாக நடந்து வந்த, இரு தரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, கனடா சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே இந்தியாவால் தடை செய்யப்பட்ட, 'காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 45, கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

போலீசார் விசாரணை



கனடாவில் பிறந்த, கனடா குடியுரிமை பெற்று உள்ள அவர், மேற்கு கனடாவில் உள்ள சுர்ரே பகுதி யில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடா பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர். இந்த படுகொலையில், இந்திய அரசின் ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி, ''இந்த விவகாரத்தில், இந்தியாவின் உயரதிகாரியை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, குறிப்பிட்டார்.

கனடாவில் உள்ள, 'ரா' அமைப்பின் தலைவர் பவன் குமார் ராயை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக, கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை நேற்று கூறியுள்ளதாவது:

கனடா பிரதமர் ட்ரூடோவின் பேச்சு, ஆதார மற்றது, உள்நோக்கம் உடையது. பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அவற்றுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்தியா அமைதியை விரும்பும், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. மற்ற நாடுகளின் விவகாரத்தில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் கனடா அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்பது அந்த நாட்டுக்கே ஆபத்தாக முடியும்.இவ்வாறு வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா துாதர் கேமரூன் மெக்கேயை, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

அவரிடம், இந்தியாவில் உள்ள கனடாவின் உயரதிகாரி ஒருவரை, ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.



பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. நம் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு கேடு விளைவிக்கும் எதையும் சகித்து கொள்ள முடியாது. நம் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்., உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.- ஜெயராம் ரமேஷ்பொதுச் செயலர், காங்கிரஸ்



அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரின்னே வாட்சன் கூறுகையில், ''இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானவை. இது மிகவும் கடினமான ஒரு விஷயம். இந்த விஷயத்தில் கனடா அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.



கனடா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டின் துாதர் கேமரூன் மெக்கேவுக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்த அவரிடம், கனடா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கனடா அதிகாரி ஒருவரை ஐந்து நாட்களுக்குள் வெளியேற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும் வேகமாக வெளியில் வந்த கேமரூன் மெக்கேவிடம், பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். ஆனால், அவர்களது கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து அவர், கோபத்துடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.



காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில், இந்திய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறிய குற்றச்சாட்டை மத்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது. அங்குள்ள இந்திய

மூலக்கதை