அண்ணா பல்கலை. விவகாரம்: சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு

  தினத்தந்தி
அண்ணா பல்கலை. விவகாரம்: சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு

சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, எப்.ஐ.ஆர் லீக் ஆனதன் அடிப்படையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக, இந்த அழைப்பாணையை பத்திரிகையாளர்களின் செல்போன்களுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் காவல்துறை அனுப்பி வருகிறது. இருந்தபோதும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர். அவ்வாறு விசாரணைக்கு செல்லும் பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்தது சர்ச்சைக்குள்ளானது. இந்த சூழலில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.மேலும், "விசாரணையின் போது குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையை அப்லோடு செய்தது யார்..? பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள்..? கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே..? என்று பத்திரிகையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை