ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்

  தினத்தந்தி
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு வாகன சேவைகள் நடைபெறுகின்றன. இன்று ஒரே நாளில் ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.அதன்படி, அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணிக்கு பிறகு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.அதன்பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருள்கிறார். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை