சீனா - இலங்கை நட்பு பலப்படும்: சீன உளவு கப்பல் கேப்டன் கருத்து

தினகரன்  தினகரன்
சீனா  இலங்கை நட்பு பலப்படும்: சீன உளவு கப்பல் கேப்டன் கருத்து

கொழும்பு: ‘அம்பன்தொட்டா துறைமுகத்திற்கு உளவுக் கப்பல் வருகையின் மூலம், சீன-இலங்கை  உறவு ஆழமாகும்,’ என சீன உளவுக் கப்பல் கேப்டன் ஜாங்க் ஹாங்வாங்க் கூறி உள்ளார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் செயற்கைகோள்களை கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட சீன உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, இலங்கையின் அம்பன்தொட்டா துறைமுகத்திற்கு வந்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி தந்துள்ளது. அக்கப்பல் வரும் 22ம் தேதி வரை இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.இந்நிலையில், சீன உளவு கப்பலின் கேப்டன் ஜாங்க் ஹாங்வாங்க் நேற்று விடுத்த அறிக்கையில், ‘யுவான் வாங் 5 கப்பல் அம்பன்தொட்டா துறைமுகத்திற்கு வந்திருப்பதன் மூலம், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், சீனா- இலங்கை இடையிலான பரிமாற்றத்தை ஆழப்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும்,’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு 24ல் கோத்தபய வருகைமக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டு ஓடிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்று தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார். இங்கும் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து வெளியே வர வேண்டாம் என தாய்லாந்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், கோத்தபய வரும் 24ம் தேதி இலங்கை திரும்ப உள்ளதாக அவரது உறவினரும், இலங்கையின் முன்னாள் ரஷ்ய தூதருமான உதயங்கா வீரதுங்கா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை