கிரைம் ரவுண்ட் அப்: கணவரின் ஆண் உறுப்பில் வெந்நீர் ஊற்றிய மனைவி

தினமலர்  தினமலர்
கிரைம் ரவுண்ட் அப்: கணவரின் ஆண் உறுப்பில் வெந்நீர் ஊற்றிய மனைவி

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் மர்ம உறுப்பில், கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 32. இவர் மனைவி பிரியா, 30. இந்த தம்பதிக்கு, 2 வயதில் மகன், 1 வயதில் மகள் உள்ளனர். சென்னை ஸ்ரீபெரும்புதுாரிலுள்ள தனியார் நிறுவனத்தில் தங்கராஜ் பணியாற்றி வருகிறார். அவருக்கும், உடன் பணியாற்றும் பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த பிரியா கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட தங்கராஜ் மறுத்ததால் தம்பதிக்குள் தினமும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கராஜ், கள்ளக்காதலியை சந்தித்து விட்டு இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வேதனையடைந்த பிரியா, நள்ளிரவு, 1:00 மணிக்கு குக்கரில் நீரை கொதிக்க வைத்து துாங்கிக் கொண்டிருந்த தங்கராஜின் மர்ம உறுப்பின் மீது ஊற்றினார். அலறிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காவேரிப்பாக்கம் போலீசார், பிரியாவை கைது செய்தனர்.
போலீசாரிடம் பிரியா கூறியதாவது: இரு குழந்தைகள் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளார். சம்பாதிக்கும் பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்து விடுவார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டார். கேட்டால் என்னை அடித்து உதைப்பார். கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவருக்கு நுாதன தண்டனை கொடுக்க முடிவு செய்து, கொதிக்கும் வெந்நீரை ஊற்றினேன். இனி அவரால் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருக்க முடியாது. கள்ளக்காதல் வைத்துள்ள கணவர்களுக்கு இது ஒரு பாடம். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் ஆசிரியை வீட்டில் மாணவி தற்கொலை


மதுரை : மதுரையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியை வீட்டில், தத்துபிள்ளையாக வளர்ந்த 19 வயது மாணவி, பிரிய மனமின்றி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லுார் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் மாநகராட்சி காக்கை பாடினியார் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். 'வாலிபன்' போல் சுறுசுறுப்பாக மாணவியின் செயல்பாடு இருந்ததால் பெற்றோர் கவலைப்பட்டனர். இதை அறிந்த வகுப்பு ஆசிரியை 'என் வீட்டில் கொஞ்ச நாள் இருக்கட்டும். கவுன்சிலிங் கொடுத்து சரி செய்து விடலாம்' என தெரிவித்தார். பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருப்பாலையில் உள்ள ஆசிரியை வீட்டிலேயே மாணவி தங்கி படித்தார்.
ஆசிரியை குடும்பத்தினரும் மாணவியை, தத்துபிள்ளையாகவே கருதி அன்பாக வளர்த்து வந்தனர். நாளடைவில் தன் வீட்டிற்கு செல்ல விரும்பாத மாணவி வசதியாக உள்ள ஆசிரியை வீட்டிலேயே தங்க விரும்பினார். இதற்கு சம்மதிக்காத மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனாலும் மாணவியின் மனம் மாறவில்லை. இதற்கிடையே கல்லுாரியில் மாணவி சேர்ந்தார். பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு ஆசிரியை கூறியும் கேட்காததால், மாணவிக்கு மருத்துவமனையில், மனநல 'கவுன்சிலிங்' கொடுக்கப்பட்டது.
'வீட்டில் இருந்தால் மாணவி தன்னை தேடி வருவார்' எனக்கருதிய ஆசிரியை, விடுமுறை எடுத்து, சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் 'டிஸ்சார்ஜ்' ஆன மாணவி, நேராக ஆசிரியை வீட்டிற்கு சென்றார்; வீடு பூட்டப்பட்டிருந்தது. தன்னை தவிர்ப்பதற்காகவே ஆசிரியை வெளியூர் சென்றிருக்கிறார் என அறிந்து, விரக்தியில் அங்குள்ள மாடிப்பகுதியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியை மீதான பாசத்தால் பிரிய மனமின்றி அவரது வீட்டிலேயே மாணவி உயிரை மாய்த்துக்கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிறுமி கைப்பையில் துப்பாக்கி தோட்டா

சென்னை: இஸ்ரேல் நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் குடும்பத்தைச் சேர்ந்த, 5 வயது குழந்தையின் கைப்பையில், துப்பாக்கி தோட்டா இருந்தது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா துபே, 64. இவர், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன், இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.சுற்றுலா முடிந்து, சென்னை வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்வதற்காக, 'இண்டிகோ' விமானத்தில் சென்னை வந்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கான பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கிருஷ்ணா துபேவின் 5 வயது பேத்தியின் கைப்பையில் துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணா துபே குடும்பத்தினரின் பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், 'இஸ்ரேல் நாட்டு சுற்றுப்பயணத்தின்போது, கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்தது. துப்பாக்கி தோட்டா என தெரியாமல், குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்தோம்' எனக் கூறினர். தோட்டாவை ஆய்வு செய்ததில், அது வெளிநாட்டில் தயாரிக்கப்படட 9 மி.மீ., அளவு தோட்டா என்பது தெரிய வந்தது. தோட்டாவை பறிமுதல் செய்த போலீசார், விளக்கக் கடிதம் பெற்ற பின், அவர்களை அனுப்பி வைத்தனர்.

ரூ.27 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை : வால்டாக்ஸ் சாலை பகுதியில், வாகன சோதனையின் போது, 27 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, வால்டாக்ஸ் சாலை ரோடு, பத்மநாபா தியேட்டர் அருகில், நேற்று ஏழுகிணறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த, புதுச்சேரி, காரைக்கால், கல்மாட்டு தெருவை சேர்ந்த முகமது ஷுப், 30, என்பவரை, சந்தேகித்து விசாரித்தனர்.மோட்டார் சைக்கிள் இருக்கையின் கீழ் சோதனையிட்டதில், 27 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவரிடம் அந்த பணம் குறித்து, போலீசார் விசாரித்தனர்.மூன்று ஸ்டீல் கம்பெனியில் இருந்து வசூல் செய்யபட்ட பணத்தை, கிருஷ்ணகிரியில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், ஆவணமில்லாததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்காதலனை விட்டு வர மறுத்த மனைவியை கொன்ற கணவர் கைது

திருப்பத்துார் : எலவம்பட்டி அருகே, கள்ளக்காதலனை விட்டு வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், எலவம்பட்டி அருகே ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 60; விவசாயி. இவர் மகள் அருண்மொழி, 27.இவருக்கும் ஆந்திரா மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேல்முருகன், 30, என்பவருக்கும் 2013ல் திருமணமானது. ஒன்பது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மருத்துவ பரிசோதனையில் வேல்முருகனுக்கு குறைபாடு என தெரிந்தது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.விரக்தியடைந்த அருண்மொழி, குழந்தை பெற நினைத்து, அதே பகுதியை சேர்ந்த பரசுராமன், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பு கொண்டதில், மூன்று மாத கர்ப்பமானார்.
இதையறிந்த வேல்முருகன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால், கள்ளக்காதலன் பரசுராமனுடன் அருண்மொழி, கடந்த, 1ல் வீட்டை விட்டு வெளியேறினார்.இது குறித்து குப்பம் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, கள்ளக்காதலனுடன் சித்துாரில் இருந்த அருண்மொழியை கண்டுபிடித்து, வேல்முருகனிடம் ஒப்படைத்தனர்.சிறிது நாள் கழித்து தந்தை வீட்டுக்கு செல்வதாக அருண்மொழி கூறிச்சென்றுள்ளார். அங்கும் கள்ளக்காதலன் பரசுராமனுடன் அருண்மொழி தனிமையில் இருந்துள்ளார்.
இதையறிந்த வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு, ஜீவானந்தபுரம் சென்று மனைவியை தன்னுடன் வாழ வர அழைத்தபோது, அவர் மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த அவர், அந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு தப்பினார். திருப்பத்துார் போலீசார் வழக்குப்பதிந்து குப்பத்தில் பதுங்கியிருந்த வேல்முருகனை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்திய நிகழ்வுகள்



பந்தயத்தில் தோற்ற ஆத்திரத்தில் ஜெயித்தவர் தலை துண்டிப்பு

தேஷ்பூர்: பந்தயத்தில் தோற்ற ஆத்திரத்தில் வென்றவரின் தலையை துண்டித்தவர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார்.
அசாம் மாநிலம் சோனிபூர் மாவட்டம் டோயலூரில் நேற்று முன் தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. அப்போது, துனிராம் மத்ரி மற்றும் ஹேம் ராம் ஆகிய இருவரும் எந்த அணி ஜெயிக்கும் என 500 ரூபாய்க்கு பந்தயம் கட்டினர். இதில் ஹேம் ராம் கூறிய அணி ஜெயித்து விட்டது. இதையடுத்து, துனிராமிடம் பந்தயப் பணத்தைக் கேட்டு நச்சரித்தார். ஆத்திரம் அடைந்த துனிராம், அரிவாளால் ராமின் தலையை துண்டித்தார். பின், தலையுடன் ரங்காபரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராம் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துனிராம் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோர்ட் வளாகத்தில் குற்றவாளி கொலை

ஹபூர் : உத்தர பிரதேச நீதிமன்ற வளாகத்தில், குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர், லக்கான் என்ற யஷ்பால், 35. இவர் மீது, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களில், ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.,யின் பரீதாபாத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யஷ்பால், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, நேற்று ஹபூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, நீதிமன்ற வளாகத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், யஷ்பாலை சுட்டுக் கொன்றவர்களை தேடி வருகின்றனர்.

காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவரது சகோதரரும் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரை பூர்வீகமாக உடைய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள், காஷ்மீர் பண்டிட் என அழைக்கப்படுகின்றனர். கடந்த 1990களில், இவர்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர், அங்கிருந்து வெளியேறி, புதுடில்லி உட்பட பல பகுதிகளில், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களை, மீண்டும் காஷ்மீரில் குடியேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, அவர்கள் மீது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதலை துவக்கிஉள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று சோபியான் மாவட்டத்தில், ஆப்பிள் தோட்டத்தில் இருந்த சுனில் குமார் என்ற பண்டிட்டை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில், சுனில் குமாரின் சகோதரர் பின்டு குமாரும் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக, சோபியான் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த படுகொலைக்கு, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலக நிகழ்வுகள்:

பஸ் - லாரி மோதி விபத்து 20 பேர் தீயில் கருகினர்

லாகூர் : பாகிஸ்தானில், பயணியர் பேருந்தும், எண்ணெய் ஏற்றி வந்த 'டேங்கர்' லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் இருந்து, கராச்சி நோக்கி பயணியர் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில், இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன.பயணியர், பேருந்தில் இருந்து வெளியே குதித்து தப்ப முடியாதபடி, கண் இமைக்கும் நேரத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில், மொத்தம், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலரது உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகின.
மரபணு சோதனை வாயிலாக, ஆட்களை அடையாளம் கண்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த விபத்தில், தீயில் கருகி படுகாயம் அடைந்த, 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த 13ம் தேதி, பயணியர் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். ஒரே வாரத்தில் நிகழ்ந்துள்ள இரண்டு கோர விபத்துகள், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் மர்ம உறுப்பில், கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை