இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்

நியூயார்க்: இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மூவர்ண கொடி  ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.  இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று நாட்டின் 76வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள், இந்திய வம்சாவளிகளும் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால், இந்திய தேசிய கொடியை ஏற்றினார். நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான தேவி பிரசாத் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாடகர் சங்கர் மகாதேவன் நாட்டுப்பற்று பாடலை பாடினார். அவருடன் சேர்ந்து இந்திய வம்சாவளியினரும் இசைக்கேற்ப அசைந்து ஆடியபடி, பாடலை பாடினர். நிகழ்ச்சியில் தேவி பிரசாத், இந்திய தேசிய கீதம் பாடினார். மூவர்ண கொடியை ஏற்றும்போது, அதனை காண நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தில் இந்திய தேசிய கொடியானது டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

மூலக்கதை