கிரீமியா விமானப்படை தளம் மீது தாக்குதல் ரஷ்யாவின் 9 போர் விமானங்கள் அழிப்பு: நாங்கள் தாக்கவில்லை -உக்ரைன்

தினகரன்  தினகரன்
கிரீமியா விமானப்படை தளம் மீது தாக்குதல் ரஷ்யாவின் 9 போர் விமானங்கள் அழிப்பு: நாங்கள் தாக்கவில்லை உக்ரைன்

கீவ்: ரஷ்யாவின் முக்கியமான கிரீமியா ராணுவ விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் உறுதிபடுத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 5 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. இந்நிலையில், ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு தாக்குதல் நடத்தி தன்னுடன் இணைத்து கொண்ட கிரீமியாவில் உள்ள, ரஷ்ய ராணுவ விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் தெற்கு பகுதியில் இருந்து நேற்று குண்டுகள் வீசியதில் விமானப்படை தளம் தீப்பிடித்தது. இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கருங்கடல் அருகே உள்ள சாகி ராணுவ விமான தளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன. தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. போர் விமானங்களுக்கு சேதம் ஏற்படவில்லை,’ என்று தெரிவித்தது. ஆனால், இந்த தளத்தின் மீது உக்ரைனில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கிரீமியா விமான தளத்தின் மீது தனது ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் விமானப்படை கூறியுள்ள போதிலும், ‘இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்துள்ளனர்,’ என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை