நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி

தினமலர்  தினமலர்
நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் இவரது கணவரான செந்தில். இவர்கள் இருவரும் சார்லி சாப்ளின்- 2 படத்தில் சின்ன மச்சான் என்ற பாடலை இணைந்து பாடி சினிமாவில் அறிமுகமானவர்கள். தொடர்ந்து இருவரும் சினிமாவில் பாடி வருகின்றனர். புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலை பாடினார் ராஜலட்சுமி. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இதனிடையே கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள மதுரை வீரன் என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் அவருடன் இணைந்து ராஜ லட்சுமி தான் பாட இருந்தாராம். ஆனால் அதிதி ஷங்கரை பாட வைத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாடகி ராஜலட்சுமி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛விருமன் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து நான் பாடிய மதுரை வீரன் பாடலில் எனது குரலுக்கு பதிலாக அதிதி ஷங்கரின் குரல் இடம் பெற்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை . சினிமாவில் இதுபோன்று நடப்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஒரு பாடலுக்கு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கிறதோ அவர்களைத் தான் இசை அமைப்பாளர்கள் பாட வைப்பார்கள். அப்படி மதுரை வீரன் பாடலை முதலில் என்னை பாட வைத்த யுவன் சங்கர் ராஜா, எனது குரலை விட அதிதி ஷங்கரின் குரல் சிறப்பாக இருந்ததால் மீண்டும் அவரை வைத்து அந்த பாடலை பாட வைத்து இருக்கிறார். அவரும் நன்றாகத்தான் பாடி இருக்கிறார். அதனால் இதற்காக அதிதி ஷங்கரை பலரும் விமர்சிப்பதை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் பாடகி ராஜலட்சுமி.

மூலக்கதை