இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணம் கடும் உயர்வு: ரணில் விக்ரமசிங்கே அரசைக் கலைக்க மக்கள் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணம் கடும் உயர்வு: ரணில் விக்ரமசிங்கே அரசைக் கலைக்க மக்கள் வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கையில் மின்சார கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அரசை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்த வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்னனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணத்தை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. யூனிட்டுக்கு 75% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர். இனி 198 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தற்போது மின்கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இடைக்கால அரசை கலைத்துவிட்டு உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கையில் பொதுமக்களும், தொழிலாளர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கொழும்புவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர். கொழும்புவில் இருந்து தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்க பல்வேறு நாடுகள் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் அவரை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து முழு பாதுகாப்பு அளிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முயற்சி செய்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரணில் தலைமையிலான தற்போதைய காபந்து அரசை கலைத்து விட்டு உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை