44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு: இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது

தினகரன்  தினகரன்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு: இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இந்திய  மகளிர் ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கப்பதக்கத்தையும், ஜார்ஜியா அணி வெள்ளிபதக்கத்தையும்  கைப்பற்றியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாற்றை விளக்கி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.அதைத் தொடர்ந்து 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் பதக்கம், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றயது. இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. இத்துடன், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது.

மூலக்கதை