அதிகரிக்கும் பதற்றம்!: சீன துருப்புகள் தீவிர போர் பயிற்சி.. தைவானுக்கு விரைந்தது அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல்..!!

தினகரன்  தினகரன்
அதிகரிக்கும் பதற்றம்!: சீன துருப்புகள் தீவிர போர் பயிற்சி.. தைவானுக்கு விரைந்தது அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல்..!!

வாஷிங்டன்: தைவான் எல்லையை சுற்றி சீனா உக்கிரமாக ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர் கப்பலான யுஎஸ்எஸ் ரெனால்ட் தைவானுக்கு விரைந்துள்ளது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக தைவான் செயல்பட்டு வந்தாலும் அதன் மீது தொடர்ந்து கண் வைத்திருக்கிறது சீனா. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள தக்க தருணத்தை எதிர்பார்த்து சீனா காத்திருக்கும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் பயணம் சீனாவை ஆத்திரமடைய செய்திருக்கிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தைவான் எல்லையை சுற்றி 6 பகுதிகளில் சீனா தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதால் சீனா, தைவான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சீனா 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை வீசி சோதித்தது. சீனாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே போர் பயிற்சியின்போது சீனா பயன்படுத்திய ஏவுகணைகளில் சில தங்கள் நாட்டின் எல்லையில் உள்ள பொருளாதார மண்டலத்தில் விழுந்ததாக ஜப்பான் அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. ஜப்பான் வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியை வரவேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தைவான் எல்லையில் சீனா மேற்கொண்டு வரும் தீவிர ராணுவ பயிற்சி வரும் ஞாயிறு வரை நீடிக்கும் என்று கூறப்படும் நிலையில், அமெரிக்க கடற்படை விமான தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ரெனால்ட் தைவான் விரைந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மூலக்கதை