தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவனந்தபுரம்; கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் மெதுவாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \'கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் முதல் 5-ந் தேதி வரை அதிதீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை