அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!

தினகரன்  தினகரன்
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!

வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதனையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார். அதன்படி, நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்தார். அமெரிக்க செனட் சபை அங்கீகாரத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நீதிபதி ஜாக்சனை ஆதரித்து 53 வாக்குகளும் எதிர்த்து 47 வாக்குகளும் கிடைத்தது.தொடர்ந்து, கறுப்பினத்தை சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில்,  51 வயதான கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். இவருக்கு முன்பாக இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 6வது பெண் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவின் அரசியலமைப்பை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், பயம் அல்லது தயவு இல்லாமல் நீதியை வழங்குவதற்கும் முழு மனதுடன் நான் பொறுப்பேற்கிறேன்\' என்று ஜாக்சன் உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை