அரசியலுக்கு வர மாட்டேன்; பூனம் கவுர்

தினகரன்  தினகரன்
அரசியலுக்கு வர மாட்டேன்; பூனம் கவுர்

ஐதராபாத்: தமிழில் ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பயணம்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘என் வழி தனி வழி’ உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பூனம் கவுர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில கைத்தறி துறையின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். அப்போது சந்திரபாபு நாயுடு, ‘பூனம் கவுர் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று சொன்னார். ஆனால், இதுவரை பூனம் கவுர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: நான் எதிர்பாராத நேரத்தில் அரசியல் என்னுடைய வீட்டுக் கதவை தட்டியது. மாற்றத்தை கொண்டு வர அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பு பவர்களுக்கே அரசியல் வேண்டும். உண்மையாக இருந்தால் அரசியல் அதிகாரம் தேவை இல்லை. அரசியல்வாதிகளை விட வலிமையான தலைவர்கள் தான் இப்போது நாட்டுக்கு தேவை. எனக்கு திடீரென்று அரசு பதவி வந்தபோது, நீச்சலே தெரியாதபோது நீச்சல் குளத்தில் தள்ளப்படுவது போல் இருந்தது. சந்திரபாபு நாயுடுவை ஒரு ஆசிரியராக பார்க்கிறேன். அவர் என்னை தொலைநோக்கு பார்வையாளர் என்று சொன்னபோது மிகவும் மகிழ்ந்தேன். நான் எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள தொடர்ந்து போராடுவேன்.

மூலக்கதை