உலகளாவிய இந்திய அழகி குஷி படேல்
வாஷிங்டன்: உலகளவிலான 2022ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி குஷி படேல் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். உலக அளவிலான மிஸ் இந்தியா அழகிப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் மும்பையில் இப்போட்டி நடைபெற்றது. பின்னர், தற்போதுதான் 2022ம் ஆண்டுக்கான இந்த போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் 12 அழகிகள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்தை சேர்ந்த கல்லூரியில் பயோமெடிக்கல் படிக்கும் மாணவி குஷி படேல் பட்டம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த வைதேகி டாங்ரே 2வது இடத்தையும், ஸ்ருதிகா மானோ 3வது இடத்தையும் பெற்றனர். சொந்தமாக துணிக்கடை வைத்துள்ள குஷி, அடுத்த ஓராண்டுக்கு நிறைய தொண்டு நிகழ்ச்சிகள் மூலமாக, மக்களுக்கு உதவ திட்டமிட்டு உள்ளார்.