ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி: பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி: பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

ஜெர்மனி: ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில், ‘சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும்’ என, ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி வந்தார். முனிச்சி விமான நிலையத்தில் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி காவேரியின் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி பிரதமர் மோடியை வரவேற்றனர். இதனை மோடி ரசித்து பார்த்தார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி முனிச்சி விமான நிலையத்துக்கு வெளியே இந்தியர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை ஏந்தி அவர்கள் பிரதமருக்கு உற்சாகமாக வரவேற்றனர். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். ஜெர்மனியில் 2 நாட்கள் தங்கியிருக்கிறார். வரும் 28ம் தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபுஎமிரேட்சுக்கு செல்கிறார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யன் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்சின் புதிய அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் ரஹ்யானை சந்தித்து பேசுகிறார்.

மூலக்கதை