மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை: பாக். நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை: பாக். நீதிமன்றம் அதிரடி

லாகூர்: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது. இதில் 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சஜீத் மஜீத் மீர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மஜீதை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், பயங்கரவாதத்திற்கு மஜீத்  நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி மஜீத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டான்.

மூலக்கதை