தங்கம் கடத்தலில் முதல்வருக்கு தொடர்பா? சொப்னாவிடம் 2ம் நாளாக 9 மணி நேரம் விசாரணை

தினகரன்  தினகரன்
தங்கம் கடத்தலில் முதல்வருக்கு தொடர்பா? சொப்னாவிடம் 2ம் நாளாக 9 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் தொடர்பாக சொப்னாவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தல், வெளிநாட்டுக்கு பணம் கடத்தியது ஆகிய சம்பவங்களில் கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர், அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக, சொப்னா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலத்தை நீதிமன்ற அனுமதியுடன் பெற்ற அமலாக்கத் துறை கடந்த 22ம் தேதி (நேற்று முன்தினம்) விசாரணைக்கு ஆஜராகுமாறு சொப்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. இதில் தங்கக் கடத்தல், வெளிநாட்டுக்கு பணம் கடத்தல் ஆகிய சம்பவத்தில் யார்? யாருக்கு? தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் சொப்னாவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல முக்கிய விவரங்களை சொப்னா, விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 2வது நாளாக ேநற்றும் சொப்னாவிடம் விசாரணை நடைபெற்றது. காலை 11 மணி தொடங்கிய விசாரணை இரவு 8 மணியையும் தாண்டி தொடர்ந்தது. அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். அதற்கு சொப்னா அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். முதல்வருக்கு எதிராக சதியில் கூட்டா?   தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சொப்னாவும், முன்னாள் அரசு தலைமை கொறடாவான ஜார்ஜும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாவுடன் ஜார்ஜ் பேசும் ஒரு ஆடியோ வெளியானது. இதுதொடர்பாக, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சரிதா நாயர் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதன் பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிரான சதியில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. பினராய் விஜயனுக்கு எதிரான சதியில் சொப்னா, ஜார்ஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த பத்திரிகை ஆசிரியரான நந்தகுமார் ஆகியோருக்கு தொடர்பு உண்டு. ஆனால் இவர்களுக்கு பின்னணியில் இந்த சதியில் பெரிய திமிங்கலங்கள் உள்ளன’ என்று கூறினார்.

மூலக்கதை