இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த மோடி அதானியிடம் விசாரணை நடத்த போவது எப்போது?: அமலாக்கத் துறைக்கு காங். கேள்வி

தினகரன்  தினகரன்
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த மோடி அதானியிடம் விசாரணை நடத்த போவது எப்போது?: அமலாக்கத் துறைக்கு காங். கேள்வி

புதுடெல்லி: இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்திக்கான டெண்டர் இந்தியாவை சேர்ந்த அதானி குழும் எடுத்துள்ளது. அந்த பகுதியில் ஆய்வு நடத்தி உள்ள அதானி குழும், விரைவில் உற்பத்தி பணியை தொடங்க உள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்திற்கு இந்த காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குவதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச மூலம் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், அடுத்த நாளே இதை மறுத்த அவர், பதவியை ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. இது, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ஸ்டண்ட். அனைத்து ஒன்றிய விசாரணை அமைப்புகளும் அரசாங்கத்தின் கைகளில் சிப்பாய்களாக மாறிவிட்டது. இந்த ஏஜென்சிகள் அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. மோடி அரசின் உத்தரவை பெற்றே, அமலாக்கத்  துறை இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. அதானி குழுமத்திற்கு காற்றாலை மின்சாரத் திட்டம் தர மோடி அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் என்ன? இது பற்றி அமலாக்கத் துறையும், பிற ஏஜென்சிகளும் ஏன் விசாரிக்காமல் தூங்குகின்றன?. இது, விசாரணைக்குரிய ஊழல் வழக்கு அல்லவா? எந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது? அமலாக்கத்துறை எப்போதாவது அதானி குழுமத்தைச் சேர்ந்த யாரையாவது அழைத்திருக்கிறதா? அல்லது விசாரிக்க அழைக்க திட்டமிட்டுள்ளதா?’ இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை