அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா

தினமலர்  தினமலர்
அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் இது.

இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த 'கஞ்சாப்பூவு கண்ணாலே' பாடலின் சிங்கிள் கார்த்தியின் பிறந்தநாளான மே 25ம் தேதி வெளியானது. யு டியூபில் 50 லட்சம் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இப்பாடல் ஹிட் பாடலாக அமைந்துவிட்டது. இந்தப் பாடலின் லிரிக் வீடியோவிற்கு இடையே ஒரிஜனல் காட்சிகள் சிலவற்றையும் இணைத்துள்ளார்கள். அதில் அதிதியின் நடனமும் சிறப்பாக அமைந்துள்ளது.

அதற்காக அதிதி ஷங்கரைப் பாராட்டியுள்ளார் இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா. “விருமன், கஞ்சாப்பூவு கண்ணாலே…வாட் எ சாங்…கார்த்தி பருத்தி வீரன் மாதிரியும், அதிதி ஷங்கர், அனுபவம்மிக்க நடிகை போலவும் இருக்கிறார்கள். குறிப்பாக 3.11 முதல் 3.16 வரையில் அதிதியின் அறிமுகப் படம் என்றே நம்ப முடியவில்லை,” என அதிதி அற்புதமாக நடனமாடியிருப்பதைப் பாராட்டியுள்ளார்.

சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து, 'தலைவரே, எனக்கு ஒண்ணும் புரியலை தலைவரே, என்னிடம் வார்த்தைகள் இல்லை சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார் அதிதி.

மூலக்கதை