ரூ.100 கோடி! 'அம்மா' உணவகங்களை உயிர்ப்பிக்க... அரசிடம் நிதி கேட்கிறது மாநகராட்சி

தினமலர்  தினமலர்
ரூ.100 கோடி! அம்மா உணவகங்களை உயிர்ப்பிக்க... அரசிடம் நிதி கேட்கிறது மாநகராட்சி

சென்னையில், நஷ்டத்தில் இயங்கும் 'அம்மா' உணவகங்களை ஏழை, எளிய மக்கள் நலன் கருதி, தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்படுத்த, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தமிழக அரசிடம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.





அரசிடம் இருந்து நிதி கிடைக்கும்பட்சத்தில், அம்மா உணவகங்களில், உணவின் தரத்தை உயர்த்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2013ல், சாந்தோம் பகுதியில், மலிவு விலையில் உணவு விற்பனை என்ற அடிப்படையில், 'அம்மா' உணவகம் துவக்கப்பட்டது.ஏழை, எளிய மக்கள் நலன் கருதி, அப்போது முதல்வராக இருந்த, மறைந்த ஜெயலலிதா இதை துவக்கி வைத்தார்.

வரவேற்பு


இதில், காலை உணவாக ஒரு இட்லி ஒரு ரூபாய்; பொங்கல் ஐந்து ரூபாய்; மதியம் சாப்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்; தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.குறைந்த விலையில் தரமான, ருசியான உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டதால், அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.

இதனால், அரசு மருத்துவமனைகள் உட்பட வார்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில், 407 அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன.பொதுமக்களிடம் தொடர்ந்து வரவேற்பு பெற்ற நிலையில், மாலையில் இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய்க்கு விற்பனை துவங்கியது.நாளடைவில், சப்பாத்தி செய்வதற்காக வாங்கப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்தன.

இதனால், குறைந்த அளவில் சப்பாத்திகள் கைகளில் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இதற்கிடையே, மெட்ரோ, நீதிமன்ற உத்தரவு காரணமாக, ஐந்து உணவகங்கள் மூடப்பட்டு, தற்போது 402 உணவகங்கள் செயல்பாட்டில் உள்ளன.ஏழை, எளிய மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவகங்கள், கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு உணவளித்து, மிகப்பெரும் சேவையாற்றின. இதனால், பலர் பசியாறி மகிழ்ந்தனர்.






குற்றச்சாட்டு

தற்போது சில அம்மா உணவகங்களில், மதிய உணவை தவிர்த்து காலை, மாலை நேரங்களில் தயாரிக்கப்படும் இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றை தனியார் ஹோட்டல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், பொதுமக்களுக்கு போதிய அளவில் உணவு கிடைக்காமல், அம்மா உணவகத்தை நம்பியவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மதிய உணவுகளிலும் தரம் இல்லாததது, சுகாதாரமான குடிநீர், வளாகம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால், அம்மா உணவகத்தின் மீதான அனைத்து தரப்பு மக்களின் ஈர்ப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, 2,600 கோடி ரூபாய் கடன் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி என்ற நிலையில், கடும் நிதிச் சுமையால் மாநகராட்சி சிக்கித் தவித்து வருகிறது.

இதற்கிடையே, அம்மா உணவகத்தாலும், ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.இதனால், அம்மா உணவகத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் நடத்த முடியாமல் மாநகராட்சி தவிக்கிறது.எனினும் ஏழை, எளிய மக்கள் நலன் கருதி, இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் வழங்கும்படி, தமிழக அரசிடம் மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது.



ஷ்டம்

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை ரிப்பன் மாளிகையில் சமீபத்தில் அம்மா உணவகம் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்மா உணவகத்தில் தினசரி 2 லட்சம் இட்லி, தலா 10 ஆயிரம் அளவில் சாதங்கள், 70 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், தினசரி 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதற்கான செலவு ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் ஆகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது

.விற்பனை சதவீதத்தை அதிகரிக்க போதிய நிதி இல்லை. கொரோனா, மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில், பெருவாரியான மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகங்களை தொடர்ந்து உயிர்ப்புடன் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்காக, தமிழக அரசிடம் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாயை, அம்மா உணவகத்திற்கு ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.அவ்வாறு ஒதுக்கப்படும் பட்சத்தில், அம்மா உணவகத்தின் உணவின் தரம் மற்றும் சுவை, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சிக்கு ஆண்டாண்டுக்கு ஏற்படும் நஷ்டமும் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


சென்னையில், நஷ்டத்தில் இயங்கும் 'அம்மா' உணவகங்களை ஏழை, எளிய மக்கள் நலன் கருதி, தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்படுத்த, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தமிழக அரசிடம், சென்னை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை