சமூகப் பரவல் நோயாக குரங்கம்மை மாறக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சமூகப் பரவல் நோயாக குரங்கம்மை மாறக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: ‘குரங்கம்மை நோய்’ சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை கொரோனா ஆட்டிப் படைத்தது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய், தற்போது மெதுவாக பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 20 நாடுகளில் 200 பேருக்கு இது தாக்கி இருக்கிறது.  இந்நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின், ‘உலக தொற்று அபாய தயார்நிலை’ குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் நேற்று கூறுகையில், ‘‘மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும்  நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை.  தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. சில நாடுகளிடம் மட்டுமே இந்த நோய்க்கான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கின்றன. உலகளவில் எவ்வளவு தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது என்ற புள்ளி விவரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை  தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும்,’’ என்றார்.

மூலக்கதை