போலி பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை மாஜி அமைச்சரின் மனைவிக்கு 2 ஆண்டு சிறை
கொழும்பு: போலி பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவின் மனைவியான சஷி வீரவன்சா, இரண்டு போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை போலியாக சமர்ப்பித்ததை உறுதிசெய்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பில் விசாரணைகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விமல் வீரவன்சாவின் மனைவி சஷி வீரவன்சாவுக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.