இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா?: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!!

தினகரன்  தினகரன்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா?: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!!

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன. மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர்.  மருத்துவ ரீதியாக வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனிடையே, வன்முறையை தூண்டியதாக தொடர்ந்த வழக்கில் ராஜபக்சே, பாராளுமன்ற உறுப்பினர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சே மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே மட்டுமின்றி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ உள்பட 7 பேரை கைது செய்ய உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனகா பெரேரா மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டிருக்கிறது. கொழும்பு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

மூலக்கதை