முதன் முறையாக ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்

கர்நாடகத்தை சேர்ந்தவரான மோகன் கன்னட படங்களில் நடித்து வந்தார். அவரை மூடுபனி படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் பாலுமகேந்திரா. மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே அவரை பெரிய நட்சத்திரமாக்கியது. கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, அந்த சில நாட்கள், இளமைகாலங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, உதயகீதம் என மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழ் ரசிகர்கள் அவரை வெள்ளிவிழா நாயகன் என்ற புகழவும் செய்தார்கள். மைக் மோகன் என்று கிண்டலும் செய்தார்கள்.
பெரும்பாலும் மோகன் காதல் மற்றும் குடும்ப படங்களில்தான் நடித்திருக்கிறார். பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடித்தில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்தது. இப்போது தனது அடுத்த ரவுண்டை ஹரா என்ற படத்தின் மூலம் தொடங்கி இருக்கிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. படத்தை தீபாவளிக்கு வெளிக்கொண்டு வர திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.
மூலக்கதை
