பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு

தினமலர்  தினமலர்
பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு

கடந்த 2021-ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் டைரக்சனில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா . புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படம் ரசிகனிடம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி ஹிட்டானது. ராஷ்மிகா மந்தனாவின் சாமி சாமி பாடலும் மற்றும் சமந்தாவின் ஒ அண்டாவா பாடலுக்கான கவர்ச்சி நடனமும், நடிகர் பஹத் பாசிலின் வில்லத்தனமும் என எல்லாமாக சேர்ந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றன.

இந்த நிலையில் தற்போது புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்த படம் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் புஷ்பா படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளானது.

நல்கொண்டா மாவட்டத்தில் நார்கேட் பள்ளி என்கிற இடத்தில் எதிரே வந்த பேருந்துடன் புஷ்பா படக்குழுவினர் பயணித்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

மூலக்கதை