அரசியலுக்கு அடுத்த காயை நகர்த்துகிறார் விஜய் : பட்டினி தினத்தில் 234 தொகுதியிலும் மதிய உணவுக்கு ஏற்பாடு

தினமலர்  தினமலர்
அரசியலுக்கு அடுத்த காயை நகர்த்துகிறார் விஜய் : பட்டினி தினத்தில் 234 தொகுதியிலும் மதிய உணவுக்கு ஏற்பாடு

உலக பட்டினி தினம் வருகிற 28ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் 234 தொகுதியிலும் மக்களுக்கு மதிய உணவு வழங்குகிறார். ஏற்கெனவே மாவட்டம் தோறும் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய், தற்போது தமிழ்நாடு முழுவதும் உணவளிக்கும் திட்டத்தின் மூலம் அரசியலுக்கு வருவதற்காக அடுத்தகட்ட காயை நகர்த்துகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உலகம் முழுவதும் மே 28-ம் தேதி அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. விஜய்யின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வருகின்ற 28ம் தேதி அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை