டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலேவும், விவேக் ராமசாமியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடனான உறவை மறைத்ததாக எழுந்த புகாரில், டிரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றம் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.  அமெரிக்க அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வௌியாகி வருகின்றன. டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு குறித்து தெரிவித்துள்ள நிக்கி ஹாலே, “  இது அரசியல் பழி வாங்கும் செயல். வரலாற்றின் இருண்ட நாள். இதுபோன்ற அரசியல் பழி வாங்கும் செயல்களை செய்வதை விட, நாட்டு மக்களுக்கு தேவையான செயல்களை கட்சிகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து விவேக் ராமசாமி கூறியதாவது, “இதுஅரசு மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதற்கு வழிவகுக்கும். ஆளும் கட்சி தன் அரசியல் எதிரிகளை பழி வாங்க காவல்துறையை பயன்படுத்துகிறது” என்றார்.

மூலக்கதை